Wednesday, April 1, 2015

காதல், கல்யாணம் வாழ்க்கைப் பாடங்கள்! வருண் உளறல்கள் 8

மனைவியாக்க தகுதி பெற்றவளை மணக்கும்போது, அவளிடம் முன்னால் இருந்த ரிலேஷன்ஷிப் களைப் பற்றி என்ன சொல்வார்கள்? "அதெல்லாம் சும்மா ஒரு இனக் கவர்ச்சி! வெறும் காமத்திற்காகத்தான் அவளோட நான் சுற்றினேன்! உன்னைத் தான் உண்மையிலேயே உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன்."  என்றுதானே சொல்வார்கள்? இது "இருவர் உள்ளம்" படத்திலிருந்து பல ஆங்கிலப் படங்களில் தன்னை மணந்தவளிடம் அல்லது மணக்கப் போறவளிடம் ஆண்கள் சொல்லும் வசனம்.

 "எல்லாமே ஹார்மோன்களின் ஆட்சிதான், வெறும் காமம்தான்! காதலாவது மண்ணாங்கட்டியாவது "  என்பது ஒரு சிலரோட திடமான எண்ணம்.  திரு. பசி பரமசிவம் அவர்கள்கூட இதேபோல் ஒரு கருத்தைத்தான் அவருடைய சமீபத்திய பதிவில் பகிர்ந்துள்ளார். எழுத்தாளர் சுஜாதாகூட காதலும், காமமும் ஒண்ணுதான், எல்லாமே ஹார்மோன்கள்தான் என்கிற கருத்தோடுதான் வாழ்ந்து மறைந்தவர்.

ஒருமுறை தன்னை "பைத்தியக்காரன்" என்று பதிவுலகில்  பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் சிவராமன்    ஒரு பதிவில்  "காதல் எல்லாம் ஒண்ணும் பெரிய விசயம் கெடையாது! காதலர்கள் எல்லாருமே சந்தர்ப்பவாதிகள் தான்"னு ஒரு கருத்தை முன் வைத்தார்.  அதற்கு நான் எதிர்ப்பதிவு எழுதியதாக ஞாபகம்.

சமீபத்தில் "சுபத்ரா பேசுகிறேன்" சுபத்ராவின் தளத்தில் ஒரு காதல் கவிதை!  பின்னூட்டத்தில் விமர்சனம் செய்யப் போன நான், "ரொம்ப உருகாதீங்க சுபத்ரா!, காதலுக்கு half-life குறைவுதான், நீங்க சொல்வதுபோல் நீண்ட ஆயுள் காதலுக்கு இல்லை! என்றதும்..காதலில் லயித்துக் கவிதை எழுதிய அக்கவிஞையிடம் வாங்கிக்கட்டிக் கொண்டு வந்தேன். இருந்தாலும்  "இன்னும் 10 வருடம் சென்றபிறகு என்னுடைய பின்னூட்டத்தை வாசிச்சுப் பாருங்க, ஒரு வேளை நீங்க என்னுடைய இக்கருத்தை அப்போது  ஏற்க வாய்ப்பிருக்கு" னு ஒரு கருத்தைச் சொல்லிச்  சமாளிச்சுட்டு வந்தேன். இன்னும் 10 வருடமாகவில்லை!

ஒருவர் காதலை இழிவுபடுத்தினால், அதற்கும் எதிர்ப்பு! இன்னொருவர் காதலை ஆகா ஓஹோ என்றால்  அதற்கும் எதிர்ப்பா??

சரி,  காதல் பற்றிய சில எண்ணங்களை கேள்வி பதிலாக "அட்ரெஸ்" பண்ணிவிடுகிறேன்!

* காதலும் காமமும் ஒன்றா?

இல்லைனுதான் நான் நம்புறேன். ஆமா னு சொல்றவங்க கருத்தும் தவறாகத் தோனவில்லை! இதென்ன ரெண்டுங்கெட்டான் தனமா? :)

* காதல் புனிதமானதா?

காதலை விடுங்க! உலகத்தில் எதுதான் புனிதமானது? அதைச் சொல்லுங்க முதலில்! அப்படி எதுவுமே இல்லை! தாய்ப்பாசத்தில் சுயநலம் இருக்கு, பிறருக்கு உதவுவதில்கூட சுயநலம் உண்டு, நட்பில் சுயநலம் உண்டு..இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் ..காதல்மட்டும் ஏன் புனிதமாக இருக்கணும்? விட்டுடுங்க பாவம்.

* அதென்ன காதலுக்கு ஹாஃப்-லைஃப் குறைவு? அப்படினா?

ஒருவர்மேல் உள்ள காதல் என்கிற உணர்வு  இன்றுபோல் என்றுமே இருக்கும் என்பது உண்மையல்ல! என்னைக்கேட்டால் காதல் ரொம்ப நாள் வாழணும்னா காதலித்தவர்கள் விரைவில் சாகணும்! காதலித்தவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தால் அவர்களுக்குள் உள்ள காதல் பலஹீனமாகி நாளடைவில் தளர்ந்து, இறந்து விடும். இதுதான் நான் என் அனுபவத்தில் பார்த்தது, கேட்டது எல்லாம்.

நிற்க! "காதல் இல்லை! உண்மையான காதல் இல்லவே இல்லை!" என்றெல்லாம் நான் சொல்லவில்லை. காதலுக்கு ஆஃப் லைஃப் கம்மி! அவ்வளவுதான் சொல்லுறேன். :)

*****************************

இக்பால் செல்வன் பற்றி எழுதுங்கனு பலர் சொல்றாங்க! சரி, அவரைப் பற்றி சொல்லுமுன்னே, நான் எழுதிய ஒரு பதிவை இங்கே கொண்டு வந்து ஒட்டுகிறேன்.

//மரணம் என்றாலே பயப்படும் உலகம் இது! நாம் வாழ்வது ஒரு 30,000 நாட்கள்தான். நாம் இறந்த பிறகும் இந்த உலகம் இதே போல் இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.

எனக்கு மரணம் வந்தால் என்னை நினைத்து யார் யார் கவலைப்படுவார்கள்? யார் யார் என்னை மிஸ் பண்ணுவார்கள்? என்பதை நான் ஓரளவு யூகம் செய்யலாம். ஆனால் அதை நம் மரணத்துக்கு அப்புறம் நம் கண்களால் பார்க்க முடியுமா? யாருக்குத்தெரியும்? இறந்த பிறகு என்ன? சொர்க்கமா? நரகமா? வெற்றிடமா? இல்லை ஒண்ணுமே தெரியாதா? இல்லை ஆவியாக வந்து பதிவு செய்து, பின்னூட்டமிடு வோமா? எனக்குத்தெரியாது! சரி, இதை இறந்த பிறகு அறிந்துகொள்வோம்!

ஆனால், இணையதள, கருத்துக்கள, வலையுலக “வாழ்வில்” நாம் “இறந்த” பிறகு என்ன நடக்கிறது என்பதை நம் கண்களாலே காணலாம்!

இந்த வலையுலக கருத்துக்கள உலகத்தில், பலர் உயிருடன் இருக்கும்போதே கருத்துக்கள வாழ்வில் “சாவதும்” உண்டு. நாம் பார்க்கும் ஒவ்வொரு ஐ டி யும் ஒவ்வொரு உணர்ச்சியுள்ள உயிர் போல்தான். ஒரு சிலருக்கு பல உயிர்கள் உண்டு. எதற்கு ஒரே ஆளுக்கு பல ஐடெண்டிட்டி என்கிறீர்களா? அது அவர்கள் இஷ்டம்! அதெல்லாம் நமக்கு எதற்கு? எனக்குத்தெரிய ஒரு சில பழைய நண்பர்கள் தோழிகள் இணையதள கருத்துக்கள வாழ்வில் பெரிய “ஸ்டார்”களாகவும், “சூப்பர் ஸ்டார்”களாகவும் நம்மோடு இருந்துவிட்டு உயிரோடு இருக்கும்போதே “இறந்து” இருக்கிறார்கள். திடீரென இந்த இணையதள வலையுலக வாழ்வில் இருந்து ஒரேயடியாக மறைந்துவிடுவார்கள்! பல ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்கள் அவர்களைப் பார்க்கவே முடியாது! சொந்தப் பிரச்சினையோ, என்ன துயரமோ, இல்லை உண்மையிலேயே மறைந்துவிட்டார்களா என்பது தெரியாது. இல்லை வேறு உலகம் தேடி போய்விடுவார்களோ தெரியவில்லை, திடீரென மறைந்துவிடுவார்கள்! இதுபோல கருத்துக்களங்களில் பார்க்கிற சில உயிர்கள் “இறப்பது” ரொம்ப சாதாரணம்தான்.

நீங்கள் ஆசைப்பட்டால், கொஞ்ச நாள் ஒரு notorious கேரக்டராக இருந்து. பலரிடம் விதண்டாவாதம் செய்து, பலர் மனதில் ஒரு நல்ல/கெட்ட இடம்பிடித்து, பிறகு “இறந்து” பார்க்கலாம்! அதாவது உங்கள் ஐடெண்ட்டியை நீங்கள் கம்ப்ளீட்டாக அழித்துவிட்டு வேடிக்கை பார்க்கலாம். அப்படி நீங்கள் “இறந்த” பிறகு உங்களை மிஸ் பண்ணுகிறவர்களைப் நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்!

* உங்கள் நண்பர்கள், தோழிகள் உங்களை மிஸ் பண்ணுவது பெரிய அதிசயமில்லை.

* அதே சமயத்தில் உங்களோடு அடிக்கடி கருத்து வேறுபாடுகொண்டு உங்களை வெறுத்தவர்களும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவார்கள்.

* இவர்கள் உங்கள் வருகைக்காக ஏங்குவார்கள்.

* உங்களோடு கார சாரமாக வாதம் செய்த விவாதங்கள் மலரும் நினைவுகளாக அவர்களிடம் இருக்கும். நீங்கள் இல்லாமல் எதிர்வாதமில்லாமல் ரொம்பவே அவர்களுக்கு “போர்” அடிக்கும்.

மனிதர்கள் யாருமே கெட்டவர்கள் இல்லை. பலர் சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்மை, நம் கருத்தை வெறுப்பதுபோல தோணும். ஆனால் உண்மையில் அவர்கள் நம் எதிரியோ, நம்மை வெறுப்பவர்களோ அல்ல. உங்கள் “மனிதத்தன்மையை” நீங்கள் இல்லாதபோது மிகவும் உணர்வார்கள், அவர்கள் உள் மனதில் உங்களிடம் உள்ள நல்லவற்றை பாராட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். ஒரு வித்தியாசமான பார்வையில் பெரியமனதுடன் கவனமாகப்பார்த்தால் இந்த உலகம் உண்மையிலேயே நல்ல உலகம்தான். நம் மக்கள் எல்லோருமே நல்லவர்கள்தான்!//


இன்றைய இக்பால் செல்வனின் நிலை மேலே சொல்லப்பட்டுள்ள ஒரு நிலைதான். அவரைப்பற்றி இன்னொரு நாள் எழுதுறேன்.

*****************************

ஒரு சிலரைப் பார்த்துவிட்டு, "மனிதன் மாறுவதில்லை! அவன் பிறவிக்குணம் அவன் சாகும்வரை அவனிடம் இருக்கும்" என்றும் சொல்லுவோம்.

இன்னும் ஒரு சிலரைப் பார்த்து  "ஒரு காலத்தில் எப்படி இருந்தான்! இப்போ எவ்ளோ மாறிட்டான்" வியப்பதும் உண்டு.

இது ரெண்டுமே நாம்தான்!

ஆக, மனிதன் மாறுவானா? இல்லை அதே குணத்துடந்தான் வாழ்ந்து சாவானா? என்பதில் குழப்பமே மிஞ்சுகிறது. ஒரு சிலர் மாறமாட்டேன் என்கிறார்கள் ஆனால் ஒரு சிலர் மாறுறாங்கனுதான் சொல்லணும். அது தனிப்பட்ட நபரைப் பொறுத்தது.

********************************
வாழ்க்கைப் பாடங்கள்!

எனக்குத் தெரிந்த அமெரிக்கத் தோழி, (இவளைப் பற்றி கதை வடிவாகச் சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன்) முதல் கணவனை விவாகரத்து செய்துவிட்டாள். இவள் அவனைலக் கல்யாணம் செய்யும்போதும், அவனோட வாழ்ந்தபோதும், அவனை "ராமன்' "புத்தன்"என்பதுபோல்தான் என்னிடம் சொல்லுவாள். அவனிடம் விவாகரத்து கேட்டு வாங்கியதும் இவள்தான்.Lஅதுவும் இன்னொருவருடன் பழகி அவனை மணம் முடிக்க முடிவு செய்தபிறகு இவனுடன் ஏதோ பிரச்சினையைக் கிளப்பி டைவோர்ஸ் வாங்கியாச்சு. உறவு முறிந்த பிறகு அவன் சப்போர்ட் பண்ணும் ஸ்போட்ஸ் டீம்கூட இவளுக்குப் பிடிக்காது. அவன் குறைகளை எல்லாமே இப்போது ஊதி ஊதி வெறுக்கக் கற்றுக் கொண்டுவிட்டாள்.

பெண்கள் மென்மையானவர்கள் என்பதால் அவர்களுடன் நாம் கவனமாகப் பேச வேண்டும், பழக வேண்டும். அதாவது அவர்கள் மனது புண்படக்கூடாது என்று கூசாமல்ப் பொய்யை மெய்யாக்கி நடிக்கணும். அதே எதிர்பார்ப்புதான் இவளிடமும்.  95 விழுக்காடுகளுக்கு மேலே  எல்லாமே ஒரே வகைதான். ஆனால் அந்தளவுக்கெல்லாம் என்னால் என் தோழியிடம் நடிக்க முடியாது என்பதால்..அவளிடம், நான் சொல்லுவது.."இன்னும் ரெண்டு வருடம் சென்று இவனையும் அதே நிலைக்கு கொண்டு வந்து விடாதே! அதாவது இவனும் பழகப் பழக உனக்கு "போர்" அடித்துவிடுவான். இவனுடைய நிறைகள் எல்லாம் சாதாரணமாகவும், குறைகள் எல்லாம் பெரிதாகவும் இன்னும் ரெண்டு வருடத்தில் உனக்குத் தோனும்னு எனக்குத் தோனுது என்றேன். அவளுக்கு நான் சொன்னது  பிடிக்கவில்லை! எப்படிப் பிடிக்கும்? மென்மையானவர்கள் பெண்கள் இல்லையா?

அமெரிக்காவில் உறவுகள் எளிதில் உடைவதற்கு மேலும் சில காரணங்கள். படுக்கையில் ஒருவரோடு ஒருவர் கலக்கும் இவர்கள், மனதால் ஒருவருடன் ஒருவர் கலக்கும் இவர்கள் பண சம்மந்தமான விடயங்களை கலப்பதில்லை. தனி அக்கவுண்ட், பில்ஸ் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளுதல்..உயிருக்கு உயிராகக் காதலித்து கல்யாணம் செய்தாலும், உன் சம்பாத்யம் உனக்கு, என் சம்பாத்யம் எனக்கு! என்று கோடு போட்டு விடுகிறார்கள். இன்றைய இந்தியாவிலும் "உயர் தரப் பெண்களிடம்" இந்த கல்ச்சர் ஆரம்பித்து இருக்கும்னு நம்புறேன். இதுவும் உறவுகள் உடைவதற்கு ஒரு முக்கியக் காரணம்னு நம்புகிறேன்.

இதனால் ஒருவரை ஒருவர் அதிகமாக சகிச்சுக்க வேண்டியதில்லை என்கிறார்கள்.. உண்மைதான். ஒருத்தரை ஒருவர் "யூஸ்" பண்ணிடக்கூடாது என்பதால் இதுபோல் ஒரு அரேஞ்மெண்ட் என்கிறார்கள். கேள்வி! அவ்வளவு நம்பிக்கை இல்லாத ஒருவரை எப்படி உயிருக்கு உயிராகக் காதலிக்க முடியும்? என்கிற கேள்வியை நான் இவர்களிடம் கேட்டதில்லை. It would be considered as "RUDE" or "IMPOLITE"! They often say (including my friend) I LOVE HIM TO DEATH! என்று..என்னால் சிரிப்பை அடக்க முடியாது! சிரிச்சா அவள் கொலைகாரியாக ஆகவும் வாய்ப்பிருக்கு னு பயத்தில் சிரிப்பை அடக்க முயலுவேன்.

எனிவே, இந்தக் கணவன் இவளுக்கு போரடிச்சு அவனை அவள் வெறுக்கும் நிலை வந்தால் அதையும் பின்னால் ஒரு நாள் பகிர்கிறேன்.

************************

உளறல்கள் தொடரும்வரை பொறுத்தருள்வீராக! :)

19 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒப்பிட்டுப் பார்த்தே ஓய்ந்து போகும் வாழ்க்கை...!

Anonymous said...

வர வர தத்துவ ஞானியாயிட்டே போறீங்க....

G.M Balasubramaniam said...

திருமணம் செய்யப் போகிறவளிடம் அல்லது மனைவியாகி விட்டவளிடம் கணவன் பழைய காதலி(களை) பற்றிசொல்வது இருக்கட்டும். அதேபோல் மனைவி கணவனாகப் போகிறவனிடம் /கணவனிடம் தன் பழைய காதல் பற்றிச் சொல்வாளா? சொன்னால் இவன் எப்படி எடுத்துக் கொள்வான்.முதலில் காதல் பிறப்பதே ஹார்மோன்களால்தான் என்பது சரியெனவே தோன்றுகிறது, வயதானபின் காதலுக்கும் ஹார்மோன்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதா. இருந்தால்காதல்குறைய வேண்டும். ஆனால் காதல் குறையாமல் இருக்கும்போது....? காதலிக்க ஒரு மசூரிடி வேண்டும் . உடலிலும் சரி உள்ளத்திலும் சரி. ஏனைய செய்திகளுக்குப் பின்னூட்டம் இட எனக்குத் தெரியவில்லைYou can not marry another maan;s wife என்னும் சொல்வழக்கு ஆங்கிலத்தில் இருக்குதானே.

வருண் said...

****திண்டுக்கல் தனபாலன் said...

ஒப்பிட்டுப் பார்த்தே ஓய்ந்து போகும் வாழ்க்கை...!***

அமெரிக்கர்களில் பலருக்கு empathy, compassion எல்லாம் இருக்காதுங்க. அதனால் "சுயநலம்" மட்டுமே தலைவிரித்தாடும். உங்களுக்கு தவறாக தோனுவது அவர்களுக்குத் தோனாது.

வருண் said...

***Alien said...

வர வர தத்துவ ஞானியாயிட்டே போறீங்க....****

வாங்க ஏலியன்.:)

வருண் said...

***G.M Balasubramaniam said...

திருமணம் செய்யப் போகிறவளிடம் அல்லது மனைவியாகி விட்டவளிடம் கணவன் பழைய காதலி(களை) பற்றிசொல்வது இருக்கட்டும். அதேபோல் மனைவி கணவனாகப் போகிறவனிடம் /கணவனிடம் தன் பழைய காதல் பற்றிச் சொல்வாளா? ***

மேலை நாகரீகத்தில், பல காதலர்களுடன் வாழ்ந்துவிட்டுத்தான் பிறகு இன்னொருவரை மணக்கிறார்கள், சார். கணவனுக்கு கேட்க முடியுமென்றால், மனைவி சொல்லத் தயங்குவதில்லை, சார்.

***சொன்னால் இவன் எப்படி எடுத்துக் கொள்வான்.***

ஆண்களில் பல வகை இருக்காங்க. பொதுவாக, கடந்த கால வாழ்க்கையை சொல்ல வேண்டாம்னு பெரிய மனது செய்து அதை வடிகட்டிவிட சொல்பவர்கள் அதிகம். ஆனால் ஒரு சிலருக்கு கேட்கும் தைரியம் உண்டு. ஒரு சிலர் கேட்டுவிட்டு ஏன் கேட்டோம்? கேட்காமலே இருந்து இருக்கலாமே? என்ரும் நினைப்பதுண்டு.

***முதலில் காதல் பிறப்பதே ஹார்மோன்களால்தான் என்பது சரியெனவே தோன்றுகிறது, வயதானபின் காதலுக்கும் ஹார்மோன்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதா. இருந்தால்காதல்குறைய வேண்டும். ஆனால் காதல் குறையாமல் இருக்கும்போது....? காதலிக்க ஒரு மசூரிடி வேண்டும் . உடலிலும் சரி உள்ளத்திலும் சரி.***

தங்கள் கருத்து மிகவும் முக்கியமான ஒன்று சார். அதை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி.

***ஏனைய செய்திகளுக்குப் பின்னூட்டம் இட எனக்குத் தெரியவில்லைYou can not marry another man;s wife என்னும் சொல்வழக்கு ஆங்கிலத்தில் இருக்குதானே. ***

என் தோழி ஒரு வகை. அமெரிக்கர்களில் பல வகையான பெண்கள் இருக்காங்க, சார். ஒரு சிலர், ஒவ்வொரு "படகாக" மாறுவதில்லை.

saamaaniyan said...

வருண்...

* காதலும் காமமும் ஒன்றா?

இப்பவெல்லாம் ரொம்ப யோசிக்க வைக்கற கேள்விகளை அசால்ட்டா வீசிட்டு போயிடறீங்க... ! இல்லை வருண்... காதலில் காமம் உண்டென்றாலும் இரண்டுக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு உண்டு....

* காதல் புனிதமானதா?...

சுத்த ஹம்பக் என்று சொல்ல தோன்றினாலும், புனிதமும் இருப்பதாக தான் தோன்றுகிறது...

இதை பற்றி நிறைய எழுத வேண்டும் என்பதால் ஒரு பதிவாக போட்டு விடவா வருண் ?....

இக்பால் செல்வனை பற்றி...

இணையத்தில் அவரை பற்றி தொடர்ந்து தேடியபோது நீங்கள் அவரது பதிவு ஒன்றுக்கு பதிலாய் வெளியிட்டிருந்த படு காட்டமான பதிவு ஒன்றை காண நேர்ந்தது...

கருத்து ரீதியாய் அவருடன் அப்படி மோதிக்கொண்ட நீங்கள் தான் அவரது மறைவு குறித்தும் மிக நம்ப்பிக்கையான ஒரு பதிவை முன்னெடுத்தீர்கள் !

" * அதே சமயத்தில் உங்களோடு அடிக்கடி கருத்து வேறுபாடுகொண்டு உங்களை வெறுத்தவர்களும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவார்கள்."

உளவியல் சார்ந்த மிக நுணுக்கமான ஒன்றை சட்டென விளக்கிவிட்டீர்கள்... டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனின் சாரம்சமே இதுதான் ! தொடர்ந்து மோதிக்கொண்டாலும் பூனையால் எலியின்றி வாழ முடியாது !

அட ! தட்டச்சு செய்யும்போதே ஒன்று தோன்றுகிறது... இந்த உளவியலை மேலே சொன்ன காதலுடன் பொருத்துங்கள்... நிறைய தெளிவு பிறக்கும் !!!

அது இருக்கட்டும் வருண்...

கருத்து மோதலையும் தனிமனித உறவையும் வேறுபடுத்தி அறிய மிகமிக சிலரால்தான் முடியும். அதற்கு அதிகமான மன தெளிவு தேவை ! அது உங்களிடம் உள்ளது !... பெருமை படுகிறேன் நண்பரே !

நன்றி
சாமானியன்

வருண் said...

**** காதல் புனிதமானதா?...

சுத்த ஹம்பக் என்று சொல்ல தோன்றினாலும், புனிதமும் இருப்பதாக தான் தோன்றுகிறது...

இதை பற்றி நிறைய எழுத வேண்டும் என்பதால் ஒரு பதிவாக போட்டு விடவா வருண் ?...***

என்ன சாம், பர்மிஷன் எல்லாம் கேக்குறீங்க. கட்டாயம் எழும் சிந்தனைகளை சொல்லுங்க சாம். விவாதிக்கலாம். :)

வருண் said...

****இணையத்தில் அவரை பற்றி தொடர்ந்து தேடியபோது நீங்கள் அவரது பதிவு ஒன்றுக்கு பதிலாய் வெளியிட்டிருந்த படு காட்டமான பதிவு ஒன்றை காண நேர்ந்தது...***

இக்பால் தளத்தில் போய் ஒரு பெரிய கூட்டத்தோட கெட்ட வார்த்தையா திட்டித் திட்டி சண்டடை போட்டதுண்டு. என் தளத்திலும் அவரோட தாறுமாறாக பின்னூட்டமிட்டு அடித்துக் கொண்டு உருண்டதுண்டு. ஒண்ணு ரெண்டில்லை, ஏகப்பட்ட தருணங்களில்..அதெல்லாம் வெறும் கருத்து வேறுபாடுதான் சாம். அவர் என்ன நான் திங்கிற சோத்திலேயா மண் அள்ளிப் போட்டார்? :)

வருண் said...

***அட ! தட்டச்சு செய்யும்போதே ஒன்று தோன்றுகிறது... இந்த உளவியலை மேலே சொன்ன காதலுடன் பொருத்துங்கள்... நிறைய தெளிவு பிறக்கும் !!!***

நீங்கதான் பொருத்தி காதலையும், காமத்தையும் ஒண்ணாக்கி இல்லை ரெண்டாக்கி இல்லைனா நாலாக்கி தெளிவுபடுத்தணும் சாம்! :)

saamaaniyan said...

விவாதிக்கலாம். :)...

வருணுடன் விவாதமா.... ? இப்பதானே ஹார்ட் பீட்டை பத்தி பதிவு போட்டேன்....:):):):):):):):)

வருண் said...

*** Blogger saamaaniyan saam said...

விவாதிக்கலாம். :)...

வருணுடன் விவாதமா.... ? இப்பதானே ஹார்ட் பீட்டை பத்தி பதிவு போட்டேன்....:):):):):):):):)***

காதல், கடவுள் பற்றியெல்லாம் நெறையா விவாதிச்சாச்சு சாம். விவாதத்திற்குப் பிறகு பொதுவாக நாம் சொல்லும் தீர்ப்பு: இதெல்லாம் அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது. 99.999 விழுக்காடுகள் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்வது இல்லை. இருந்தாலும் விவாதம்னு வரும்போது பல அனுபவங்களை நாம் பகிர்ந்துகொள்வதுண்டு. அதுபோல் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பை விவாதங்கள் உருவாக்குகின்றன. ஆக விவாதத்தால் சிலருடைய சில, பல அனுபவங்களை அறிந்து கொள்ளுகிறோம். விவாதத்தால் கிடைக்கும் "இலாபம்"னு பார்த்தால் இவைகள் மட்டும்தான். :)

----------------

ஹார்ட்பீட் உங்க மன பிரமைதான். "இது"வும்தான், சாம்! :))))

Thulasidharan V Thillaiakathu said...

காதலும், காமமும் ஒன்றா என்றால் ஒன்றுதான்...ஆனால் There is a subtle difference! காதலித்ததால், அது நிறைவேறாமல், அந்த நினைவுகளில் வாழும் பெண்ணும், ஆணும் இருக்கின்றனர். மே பி வெரி ஃப்யூ. எங்களுக்குத் தெரிந்து இருக்கின்றார்கள். உண்மையாக. பொய்யில்லை. அவர்களது எண்ணத்திலும் பொய்யில்லை.

காதலித்து மணம் புரிந்து இறுதிவரை அதே அன்புடன் இருப்பவர்களும் இருக்கின்றார்களே! வலைத்தளங்களிலேயே இருக்கின்றார்கள்!! நண்பரே!

அமெரிக்க வாழ்க்கை ம்ம்ம் தெரிந்த ஒன்றுதானே இது அங்கு சகஜம் தானே! (இங்கயும் அது வந்தாச்சு. அதே போன்று நீங்கள் சொல்லியிருக்கும் இது உன் சம்பாத்தியம் என் சம்பாத்தியம் மேல்தட்டு வர்கத்திடம் இருக்கு...அப்பர் மிடில் க்ளாசிலும்....ஒரு சில முறிகின்றது. ஒரு சில தாக்குப் பிட்க்கின்றது. என்றாலும் நீங்கள் சொல்லுவது சரிதான் அதுவும் பிரிவுக்கு ஒரு காரணம் தான் அதை மறுக்க முடியாது

கருத்து வேறுபாட்டிற்கும், நட்பிற்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை வருண்! அதை வேறுபடுத்திப் பார்த்துவிட்டால் போதுமே...உங்களைப் போல!!!???!!!

Amudhavan said...

காதல் என்பதற்கு சரியான ஒரேயொரு டெஃபனிஷன் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். நபரைப் பொறுத்து, இடத்தைப் பொறுத்து, சூழலைப் பொறுத்து மாறுபாடடையும் என்றுதான் தோன்றுகிறது. ஹார்மோன் களேபரங்களாக முடிந்துபோகும் காதலும் உண்டு. அடைகாத்து இன்பங்களை எல்லாம் தொலைத்து மனதில் அந்தக் குறிப்பிட்ட நினைவுக்காக வாழ்ந்து மறையும் காதலும் உண்டு. எல்லாவற்றையுமே பிராக்டிகலாக ஏற்று எதிர்வருவதையெல்லாம் சமாளித்து அந்த இழுபறியையும் சந்தோஷமாக அனுபவிக்கும் காதலும் உண்டு. எல்லாவற்றிலும் ஏதோ ஒரு இழை அறுபடாமல் ஓடிக்கொண்டிருக்கும்.அதைப்புரிந்து கொண்டால் சரியாயிருக்கும் என்று நினைக்கிறேன்.

சுபத்ரா said...

எனக்கென்னவோ காதல் என்பது ஆண்களின் பார்வையில் வேறு மாதிரியாகவும் பெண்களின் பார்வையில் வேறு மாதிரியாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது. உங்கள் தோழியைப் பற்றி சொல்லியிருந்தீர்கள். Exceptions cannot be examples.

ஒரு வேளை திருமணத்திற்குப் பிறகு காதலைப் பற்றிய என் எண்ணங்கள் மாறலாம். I'm waiting :)

Anonymous said...

தங்கள் அன்புக்கு நன்றிகள் ! இதோ இக்பால் செல்வன் உங்கள் கண் முன்னே இருக்கின்றேன். :) கருத்துக்கள் மோதல்கள் இன்பங்கள் துன்பங்கள் எல்லாம் சட்டையில் விழும் காக்கா எச்சம் போலத் தான் ...

வருண் said...

***Thulasidharan V Thillaiakathu said...

காதலும், காமமும் ஒன்றா என்றால் ஒன்றுதான்...ஆனால் There is a subtle difference! காதலித்ததால், அது நிறைவேறாமல், அந்த நினைவுகளில் வாழும் பெண்ணும், ஆணும் இருக்கின்றனர். மே பி வெரி ஃப்யூ. எங்களுக்குத் தெரிந்து இருக்கின்றார்கள். உண்மையாக. பொய்யில்லை. அவர்களது எண்ணத்திலும் பொய்யில்லை.

காதலித்து மணம் புரிந்து இறுதிவரை அதே அன்புடன் இருப்பவர்களும் இருக்கின்றார்களே! வலைத்தளங்களிலேயே இருக்கின்றார்கள்!! நண்பரே!

அமெரிக்க வாழ்க்கை ம்ம்ம் தெரிந்த ஒன்றுதானே இது அங்கு சகஜம் தானே! (இங்கயும் அது வந்தாச்சு. அதே போன்று நீங்கள் சொல்லியிருக்கும் இது உன் சம்பாத்தியம் என் சம்பாத்தியம் மேல்தட்டு வர்கத்திடம் இருக்கு...அப்பர் மிடில் க்ளாசிலும்....ஒரு சில முறிகின்றது. ஒரு சில தாக்குப் பிட்க்கின்றது. என்றாலும் நீங்கள் சொல்லுவது சரிதான் அதுவும் பிரிவுக்கு ஒரு காரணம் தான் அதை மறுக்க முடியாது

கருத்து வேறுபாட்டிற்கும், நட்பிற்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை வருண்! அதை வேறுபடுத்திப் பார்த்துவிட்டால் போதுமே...உங்களைப் போல!!!???!!!***

வாங்க துளசி/கீதா!

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. :)

வருண் said...

***சுபத்ரா said...

எனக்கென்னவோ காதல் என்பது ஆண்களின் பார்வையில் வேறு மாதிரியாகவும் பெண்களின் பார்வையில் வேறு மாதிரியாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது. உங்கள் தோழியைப் பற்றி சொல்லியிருந்தீர்கள். Exceptions cannot be examples.***

வாங்க சுபத்ரா! நான் எழுதுவதெல்லாம் "உளறல்கள்" தான் சுபத்ரா!

என் தோழியின் ஜஸ்டிஃபிகேஷன் நிச்சயம் வேறாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

Yes, men and women are different and so they feel differently about what we call as "love". That's why we dont understand each other well when we debate about "love", I suppose.

***ஒரு வேளை திருமணத்திற்குப் பிறகு காதலைப் பற்றிய என் எண்ணங்கள் மாறலாம். I'm waiting :)***

Honestly I wish I am wrong and you are correct. Do take care, Subathra! :)

வருண் said...

***இக்பால் செல்வன் said...

தங்கள் அன்புக்கு நன்றிகள் ! இதோ இக்பால் செல்வன் உங்கள் கண் முன்னே இருக்கின்றேன். :) கருத்துக்கள் மோதல்கள் இன்பங்கள் துன்பங்கள் எல்லாம் சட்டையில் விழும் காக்கா எச்சம் போலத் தான் ... ***

வாங்க இக்பால். சிறிய இடைவேளைக்குப் பிறகு உங்களையும் உங்க பதிவுகளையும் பார்ப்பதில் மகிழ்ச்சி! :)